அன்புள்ள
நிலவு மன்னவனுக்கு,
உன் வைரமல்லி
எழுதுவது. கடந்த சில மாதங்களில் உனக்கான கடிதங்கள் தான் வெற்றிடத்தால் நிரப்பப் பட்டனவே
தவிர, உன் மீதான என் காதலில் வெற்றிடம் இல்லை. எப்போதும் போல உன் புன்னகையை என் உடைமையாக்கி
வெற்றிடம் இல்லாதவாறு நிரப்பிக் கொண்டேன். அன்பின் நெரிசலில் என் காதலும் குடித்தனம்
நடத்தக் கற்றுக் கொண்டது.
உன்னைப்
பற்றிய கவிதைகளை நான் எழுதி முடித்துப் படிக்கும் போதும், அதை வாசித்து முடித்துக்
கேட்கும் போதும் எழுதிய வரிகள், என் மீது வெட்கம் தெளித்துப் போகின்றன. ஒரே ஒரு ஆசை
உண்டு இந்த ஜென்மத்தில். உனக்குப் புரிகிறதோ, இல்லையோ எனக்குப் பிடித்த உன்னைப் பற்றிய
ஒரு சில கவிதை வரிகளை உன்னிடம் நான் வாசித்துக் காட்ட வேண்டும். உன் நிலவு முகம் இன்னும்
அதிகமாய் ஒளிர்வதை உடனிருந்து ரசிக்க வேண்டும். முடிந்தால் உன் வெட்கச் சிவப்பில் குளிர்
காய வேண்டும். உனக்குப் புரிந்த, உனக்குப் பிடித்த சில வரிகளையும் நீ சொல்ல, இல்லை
இல்லை.. நீ பாட நான் கேட்க வேண்டும்.
இன்னுமொரு
ஆசை உண்டு. மொத்த உலகிற்கும் முத்தம் தர வேண்டும், ஒரே மூச்சில். என்னால் முடியும்
என்று உனக்கும் தெரியும் தானே? உன் நெற்றி முடியிலிருந்து உன் பாத நகம் வரைக்கும் உள்ள
தூரம் தானே என் மொத்த உலகமும்? ஒரு தடவை என்ன, ஓராயிரம் தடவை என் மொத்த உலகத்தின் தூரத்தையும்
என் இதழ்களால் ஒற்றி எடுக்க முடியும் தானே? என் மொத்த உலகத்திற்கான திறவுகோல், உன்
மீசையின் ஒற்றை முடியில் அல்லவா உள்ளது. உன் மீசை முடி நுனியின் மெல்லிய தொடுதல் போதும்
என் மொத்த புலன்களும் விழித்துக் கொள்ள.
எவ்வளவு
நாள் தான் இப்படி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பாய் என்கிறாயா? இந்த கணினியின் கர்சரில்
உள்ள கார்பன் தீரும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன். ஆக, என் கடிதங்களின் expiry
MS-WORD -ஐ சார்ந்தது. ஏனெனில்
மூளையை கசக்கி நான் கடிதங்கள் எழுதுவதில்லை. என் காதலை அடமானம் வைத்து எழுதுகிறேன்,
ஒவ்வொரு முறையும். என் காதலுக்கும் ஒரு நாள் ஒரு இறுதி ஊர்வலம் உண்டு.
நான் இறந்த செய்தி உன் காதுகளை எட்டும் முன்னரே, என் காதல் இறப்பின் செய்தி
உன் இதயத்தை வந்தடையும். என் பயங்கரமான மௌனம் உன் காதுகளை கிழிக்கும் போது, என் காதலின்
மரணம் சம்பவிக்கும். ஆரம்ப நாட்களில் ஒரு நாள்
என்னை காணாவிட்டாலும் உன் கண்கள் தேடி அலை பாய்வதை ஒரு வித வலியுடன் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
இப்போதெல்லாம் சில நாட்களே ஆனாலும், பெரிய தவிப்பு ஏதும் இல்லை என்பதையும் நான் ஒரு
வித வலியுடன் கண்டு வருகிறேன். பழகப் பழக பாயசமும் புளிக்கும் என்பது உலக நியதி தானே?
எனக்கு தான் உன்னுடைய குரலை கேட்டுக் கொண்டே காலையில் சமைப்பதில் ஆரம்பித்து
இரவில் தூங்குவதில் முடிவது என்று பழக்க தோஷமாய் ஆயிற்று. மற்றவர்கள் சொல்லலாம் உன்னுடையது
காந்தக் குரல் என்று. என்னைப் பொறுத்த வரைக்கும் அது காதலின் குரல். காதலித்துக் கொண்டே
சாகத் தூண்டும் மாயக் குரல். சாகும் போதும் காதலிக்கத் தூண்டும் மந்திரக் குரல். மயிலிறகால்
காது மடல் வருடும் பரவசம். கோழி இறகால் காது குடையும் சுகம். பகல் பாடகனாய் இருந்த
நீ இரவுப் பாடகனாகவும் உயர்வு பெற்று விட்டாய். பிறகென்ன? எந்நேரமும் உன் குரல் அலை
வரிசை தான் என் வீட்டில், முக்கியமாய் என் சமையல் கட்டில். அதனால் தானோ என்னவோ வெந்நீர்
வைத்தால் கூட அது விருந்தில் முடிவடைகிறது. என்ன மோகமோ, என் வீட்டு அடுப்பங்கரைக்கு
உன் குரல் மீது..
எந்நேரமும் அலைபேசியுடனே இருப்பதால் பார்ப்பவர்கள் எல்லாரும் நான் அலை
பேசியுடன் குடும்பம் நடத்துவதாய் நினைக்கிறார்கள். உண்மையில் உன் குரலோடு தான் குடும்பம்
நடத்துகிறேன் என்பது என் காதலுக்கு மட்டும் தானே தெரியும்? என்ன செய்ய? உன் குரலுக்கு
கொஞ்சம், உன் உருவத்துக்கு கொஞ்சம், உன் புன்னகைக்கு கொஞ்சம் என என்னால் அன்பை அளந்து வைக்க முடியவில்லையே. ஒட்டு
மொத்தமாய் கொட்டி விட்டு உன்னை பார்க்க முடியாத நாட்களில் தாங்கவே முடியாது தவிக்கிறேன்.
உடைந்தாலும் மீண்டு எழுந்து வந்து திரும்பவும் காதல் செய்ய வைக்கிறாய்
அளவுக்கு அதிகமாய். இப்படியே ரப்பர் பந்தாகவே இருக்கட்டும் நம் காதல். விழுந்தாலும்
உடையாமல் மீண்டும் கைக்கு திரும்புவதாய். உடைந்து சிதறி விடும் கண்ணாடிப் பந்தாய் நம்
காதலை மாற்றி விடாதே என்ற கோரிக்கையுடன்,
உன்னுயிர்க் காதலி,
வைர மல்லி.
The Silence Between My Letters...
✨ Read. Feel. Fall in love.
Dear Moon of mine,
In the silence between my letters,
only the pages were empty… never my love.
I filled every void
with the memory of your smile,
till even loneliness forgot my name.
My words blush at me
when I read them aloud—
as if they know how deeply I love you.
One day, I wish to stand before you,
reading my poems into your eyes,
watching your moon-face glow a little brighter.
And if love permits—
let me kiss my whole world at once,
from your forehead to your feet… endlessly.
Even if I fall silent someday,
remember…
My love would have already whispered its goodbye.
- Diamond Jasmine...
💌 Read More Letters:
💌 முன் கடிதம் வாசிக்க..
👉Previous Letter: The day my heart break
💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..
👉 More Love Letters: Love Letters






